Monday, November 20, 2023

ஆனந்தத் தொல்லை

கடுப்பான குந்தவி அவனிடம், "கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தால் என்னவாம். காது வலிக்கிறது", என்று கடிந்து கொண்டாள்.

வந்தியன் வாய் சும்மா இருக்குமா என்ன, "சரி நான் பேசாமல் இருக்கிறேன். ஆனால் அது வரைக்கும் நீ பேசு", என்று வம்பிழுத்தான்.

 'அய்யோ.. இது என்னடா வம்பா போச்சு. இது தெரிந்திருந்தால் நான் அடுத்த பஸ்ல வந்துருப்பேன்', என்று தனக்குள் புலம்பிக்கொண்டு, "கொஞ்சம் பேசாமல் வாயேன்; உனக்கு புண்ணியமா போகும்", என்று கெஞ்சினாள்.

அதற்கு வந்தியன், "இப்படி தான் புண்ணியம் சேர்க்க வேண்டும் என்றால் அது தேவை இல்லை. நான் பாவக்காரனாகவே இருந்து விட்டு போகிறேன்", என்று சடைந்து கொண்டு, "சரி, ஒரு போட்டி வைத்துக் கொள்வோம் அடுத்து யார் பேசுகிறாரோ அவர் பஸ்ஸில் இருந்து இறங்கி விட வேண்டும்", என்றான்.

அதற்கு குந்தவி, "அடேய் சமார்த்தியகாரா.. அடுத்து 10 நிமிசத்தில உன்னோட ஸ்டாப் தான் வருகிறது நீ இறங்கி தான் ஆகவேண்டும். இனி நீ பேசினால்...", என்று யோசிக்க துவங்கினாள் அவள்.

உடனே அவன், "தோற்று போனால் மல்லிகை பூ வாங்கி தரவா", என்றான் ஒரு வித நகைப்புடன்.

"ம்ம்ம் ஆசைதான்.. பூ வாங்கும் வேலை எல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம். இங்கே தோற்று போனவர் அதற்கு அடையாளமாய் 100 ரூபாய் தர வேண்டும்", என்று மாத கடைசி என்றும் பார்க்காமல் போட்டி வைத்தாள். மேலும் தொடந்து, "போட்டி ஆரம்பம். இனி யாரும் பேச கூடாது", என்றாள்.

அமைதி நிலவியது. அடுத்த இரண்டு நிமிடத்தில் வந்தியனின் ஊர் வரப்போகிறது.

வந்தியன் ஆரம்பித்தான், "ஏய் அழகி. என்னால் இப்படி அமைதி காக்க முடியாது. என் ஊரும் வர போகிறது. நான் பேசி தோற்று விட்டேன். இந்தா வச்சுக்கோ", என்று ஒரு தாளை நீட்டினான்.

குந்தவி ஒரு வித ஆச்சர்யத்துடன், "என்ன இது 500 ரூபாய்? நான் 100 என்று தானே கூறினேன்", என்றாள்

"இந்த எழிலாடும் குழலுக்கு 100 ரூபாயில் வாங்கும் மல்லிகைப்பூ போதாது. நன்றாய் தலை நிறைய பூ வாங்கி வைத்துக்கொள் என் அழகு குந்தவி", என்று கூறி விடை பெற்றான்.

குந்தவிக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.

No comments:

Post a Comment